பீகாரில் பாஜகவை வெறுப்பேற்றும் நிதிஷ்குமார்.. தேஜஸ்வி ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!
பாட்னா: பீகாரில் விரைவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பின்னர் இதனை நிதிஷ்குமார் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. நாடு விடுதலைக்கு முன்னர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இன்றைய இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
முட்டாள்தனம்.. மதவழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கியை அகற்றுவதா? பாஜக மீது நிதிஷ்குமார் பாய்ச்சல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஆகையால் தற்போதைய நிலையில் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பது பல்வேறு தரப்பின் வலியுறுத்தல். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை வலியுறுத்துகின்றன. மத்திய அரசும் கூட இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு பின்னர் கைவிட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
மத்திய அரசு நிலை என்ன?
இந்நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ பிடிவாதமாக இருந்து வருகிறது. பாஜக-ஜேடியூ கூட்டணிக்கு எதிரான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்துகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி பீகார் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குழு நேரில் சந்தித்து வலியுறுத்தியது. ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாத்தியமற்றது; குழப்பங்கள் நிறைந்தது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
அனைத்து கட்சி கூட்டம்
இதனிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று மாநில அரசின் சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, ஆர்ஜேடி உள்ளிட்டவை பங்கேற்றன. இக்கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் முடிவை தெரிவித்தனர்.
விரைவில் பூகம்பம்?
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு எந்த நேரத்திலும் முறியலாம் எனவும் கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டால் ஆர்ஜேடியுடன் கை கோர்க்க நிதிஷ்குமார் தயாராகவே இருக்கிறார். அண்மையில் இப்தார் விருந்தில் தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ் பங்கேற்றார். இப்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்திலும் தேஜஸ்வியுடன் இணைந்து செயல்படுகிறார் நிதிஷ்குமார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இப்போதைக்கு நிதிஷ்குமாருடன் பாஜக மல்லுக்கட்டாது என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பீகார் அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.