பீகார் மக்களுக்காகவே விமானம், ஹெலிகாப்டர் வாங்குகிறேன்.. நிதிஷ் குமார் புது விளக்கம்.. சீறும் பாஜக
பாட்னா: பீகார் மக்கள் நலனுக்காகவே விமானத்தையும், ஹெலிகாப்டரையும் வாங்குகிறேன் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நிதீஷ் குமார் தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவுமே விமானம் வாங்குவதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், நிதிஷ் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
"பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இந்த ஆடம்பரம் எல்லாம் தேவையா?" என பாஜகவினர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் ஆட்சி அமைத்தது முதலாக, பாஜக கடும் கோபத்தில் இருந்து வருகிறது.
இல்லாத கட்சியை பற்றி பேசாதீங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு! பாஜகவை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி!
இந்த சூழலில், பீகார் அரசுக்கு தனி விமானத்தையும், ஹெலிகாப்டரையும் வாங்குவது என முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த விவகாரம்தான் தற்போது பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. புதிய விமானம், ஹெலிகாப்டர் வாங்கும் முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி கூறுகையில், "பீகார் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பலர் வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று வேலைவாய்ப்பை தேடிக்கொள்கின்றனர். இப்படியொரு மோசமான சூழல் பீகாரில் நிலவும் போது, முதல்வருக்கென தனி விமானமும், ஹெலிகாப்டரும் தேவைதானா? நிதிஷ் குமாருக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் ஆகிவிடுவோம் கனவு கண்டு வருகிறார். அந்த கனவின் வெளிப்பாடாகவே இத்தகைய ஆடம்பரங்களை செய்து வருகிறார். ஆனால், அவரது பிரதமராகும் கனவு, வெறும் கனவுதான் என அவருக்கு தெரிவதில்லை" என்றார்.
"பீகார் மக்களுக்காகவே விமானம்"
இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "பீகார் அரசுக்கு விமானம், ஹெலிகாப்டர் வாங்கும் முடிவு இப்போது எடுக்கப்பட்டது அல்ல. அது நீண்டகாலமாகவே நிலுவையில் இருந்த திட்டம். பீகாரில் பாஜக கூட்டணி அரசு இருந்த போதும், இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் பாஜக எதுவும் பேசாதது ஏன்? விமானமும், ஹெலிகாப்டரும் முழுக்க முழுக்க பீகார் மக்கள் நலனுக்காகவே வாங்கப்படுகிறது" என அவர் கூறினார்.