பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? "அதுக்கு பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்வேன்" - நிதிஷ் குமார் 'சுறுக்'
"நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நிதிஷ் குமாரின் பெயர் பீகாருக்கு வெளியே தெரிந்தது" என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
பாட்னா: பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக உயிரையே மாய்த்துக் கொள்வேன் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கூறினார்.
பீகாரில் பாஜக தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது, இனி நிதிஷ் குமாருடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பீகாரை பொறுத்தவரை, யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்தால் மட்டுமே பாஜகவால் தாக்குப்பிடிக்க முடியும். அக்கட்சி தனித்து நின்று ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
2024 தேர்தல் 'தீ’ வியூகம்! காங்கிரஸூக்கு 'ஓகே’ சொன்ன நிதிஷ்.. மாஸ்டர் ஸ்ட்ரோக்! இனிமேதான் இருக்கு!
கூட்டணி முறிவும், பகையும்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி அரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் ஆட்சி அமைத்தது முதலாக, பாஜக தீராத கோபத்தில் இருந்து வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாகவும், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் அக்கட்சித் தலைவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
நிதிஷ் குமாரா.. யார் அவர்?
இதனிடையே, 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பீகாரில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, கூட்டணி குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்களிடம், "நிதிஷ் குமாருடன் இனி கூட்டணி வைப்பீர்களா?" என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாஜக தலைவர்கள், "நிதிஷ் குமாரா.. யார் அவர், ஓ அந்த புகழ்பெறாத தலைவரா. அவருடன் இனி கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நிதிஷ் குமாரின் பெயர் பீகாருக்கு வெளியே தெரிந்தது" என கிண்டலான தொனியில் பதிலளித்தனர்.
"உயிரை மாய்த்துக் கொள்வேன்"
பாஜக தலைவர்களின் இந்த பேச்சு நிதிஷ் குமாரையும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியினரையும் கோபம் அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக தலைவர்களின் கருத்து குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கிறீர்கள். என் உயிரை மாய்த்துக் கொண்டாலும் கொள்வேனே தவிர, பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்.
தனித்து போட்டியிட்டால்..
பீகாரில் முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதே எங்களின் (ஐக்கிய ஜனதா தளம்) தயவால்தான். பீகாரை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் தோள்களில் சவாரி செய்துதான் பாஜக ஜெயிக்க முடியும். தனித்துப் போட்டியிட்டால் அவர்களால் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. எங்களுடன் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்தால்தான் பாஜகவுக்கு முஸ்லிம்களின் வாக்கு கிடைத்தது" என நிதிஷ் குமார் கூறினார்.