சொகுசு கப்பல் புதுச்சேரியில் நுழைய முடியாது.. கலாச்சார சீர்கேடு.. கொதித்த தமிழிசை - என்ன நடந்தது?
புதுச்சேரி : சென்னை - புதுச்சேரி இடையே கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசின் அனுமதியைப் பெறவில்லை.
அந்த சொகுசு கப்பலில் கலாச்சார சீர்கேடு நடவடிக்கைகள் இருந்தால் அனுமதிக்கப்படாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரிக்கு சென்ற அந்த சொகுசு கப்பல், புதுச்சேரி கடலோர எல்லைக்குள் செல்லாமலேயே திரும்பிச் சென்றுள்ளது.

சொகுசு கப்பல்
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை - புதுச்சேரி இடையேயான சுற்றுலா சொகுசுக் கப்பல் போக்குவரத்தை கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பலில் விளையாட்டு தளங்கள், கலைநிகழ்வுகளுக்கான அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த சொகுசுக் கப்பல், இரண்டாம் கட்ட பயணமாக விசாகப்பட்டினம் சென்று இன்று காலை 4:30 மணிக்கு புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்தது.

அனுமதி மறுப்பு
அந்த சொகுசு கப்பலில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் இருப்பதால் அதை புதுச்சேரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், பொது நல அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், அந்த சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் யாரேனும் புதுச்சேரியில் கரை இறங்கினால் போராட்டத்தில் ஈடுப்படப் போவதாகவும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.

ஆளுநர் தமிழிசை
இதுதொடர்பாகப் பேசிய ஆளுநர் தமிழிசை, "புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருவது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அது தொடர்பான கோப்புகளும் வரவில்லை. சொகுசு புதுச்சேரி வருவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இருக்கலாம். ஆனால் அதைக் கலாச்சார சீர்கேடு இல்லாமல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.

கலாச்சார சீர்கேடு
மேலும் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தில் எந்த விதத்திலும் மக்களும், இளைஞர்களும் பாதிக்காத சுற்றுலாவாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே அந்தக் கப்பல் வருங்காலத்தில் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசாரச் சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லாமல்தான் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

அனுமதி பெறாமல்
இந்த கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காததால் புதுச்சேரி கடலோர எல்லையிலிருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் நங்கூரமிட்டு இந்தியக் கடலோர எல்லையில் கப்பலை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். ஆனால் புதுச்சேரி எல்லைக்குள் வர முடியாது. அனுமதியின்றி இந்திய எல்லையைக் கடந்து புதுச்சேரி கடலோர எல்லைக்குள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.

திரும்பிச் சென்ற கப்பல்
இந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு வந்த கப்பல் புதுச்சேரி அருகே கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது. புதுச்சேரி கடலோர எல்லைக்குள் கப்பல் நுழைய அனுமதி வழங்கப்படாததால் புதுச்சேரிக்குள் நுழையாமல் 8:30 மணியளவில் திரும்பிச் சென்றது. இதனால் சொகுசு கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications