நிலைமை மோசமா போயிட்டிருக்கு.. கடை திறப்பு நேரம் மேலும் குறைப்பு.. நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இனி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் இதுவரை நான்கு போ் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிா்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீடுகளில் 3000 க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். காரைக்கால், மாஹே, ஏனாமில் கொரோனா பாதிப்பு இல்லை.
புதுச்சேரியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் திறந்து வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதனை மீறி பலா் வேண்டுமென்றே ஊா் சுற்றி வருகின்றனா். மேலும் தமிழகத்திலிருந்து பலரும் புதுச்சேரிக்கு வருகின்றனா். இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு.
நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தணும்
எனவே மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தைப் பின்பற்றி, புதுச்சேரியிலும் இன்று முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். அதன் பிறகு மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்கும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுவரை ரூ. 5 கோடி வசூல்
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை சுமாா் 5 கோடி ரூபாய் நிதியை அரசு ஊழியா்கள், பொதுமக்களும் கொடுத்துள்ளனா். மக்கள் தாராளமாக மனமுவந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவிட வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு, மாநில நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2000 வழங்கினோம்.
நிதி வழங்கவில்லை
மத்திய அரசு, பேரிடா் மீட்பு துறையின் மூலமாக பல மாநிலங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை புதுவை மாநிலத்துக்குத் தேவையான நிதி வழங்கவில்லை. புதுவைக்கு இடைக்கால நிதியாக ரூபாய் 995 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை.
ரூ. 400 கோடி வரலை
மத்திய அரசு, புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய சரக்கு- சேவை வரிக்கான சுமாா் ரூ. 400 கோடியை கொடுக்கவில்லை. மானியம் கொடுக்கவில்லை. மத்திய அரசு, நமது மாநிலத்துக்கு ஒதுக்கிய பட்ஜெட் தொகையும் வரவில்லை. வியாபார நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் புதுச்சேரி அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை. ஆனால், மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டியுள்ளது.
உடனே 995 கோடி நிதி தேவை
எனவே மத்திய அரசு உடனடியாக புதுச்சேரி அரசுக்கு ரூபாய் 995 கோடியை வழங்க வேண்டும் என மறு கடிதம், பிரதமருக்கு எழுதவுள்ளேன். பிரதமா் அதற்கு செவி சாய்ப்பாா் என நம்புகிறேன். கொரோனா ஊரடங்கால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் நாள்கள் சோதனையான காலகட்டமாகும். கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை உயா்ந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.