அதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கும் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
போனால் திரும்ப வராதது காலம் மட்டுமல்ல உயிரும் தான். ஆனால் இரு மற்றும் 4 சக்கர வாகனங்களை இயக்கும் பலரும், தங்களது வாகனத்தில் உள்ள உச்சபட்ச ஸ்பீடில் ஓட்டினால் தான் ஜென்ம சாபல்யம் அடைவது போல ஓட்டி, அவர்களும் விபத்தில் சிக்கி அடுத்தவர்கள் உயிரிழப்பிற்கும் காரணமாக அமைகின்றனர்.
பல காலமாக புதுவையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை குறைக்க எவ்வளவோ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும், அவை கை கொடுக்கவில்லை.

வேக கட்டுப்பாடு அமல்
இந்நிலையில் சாலை விபத்துகளை தடுக்க புதுச்சேரியில் 9 சாலைகளில் வேக அளவு கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் போகலாம் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ள வேகத்தை தாண்டி குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 20.. அதிகபட்சம் 50
இதன்படி புதுவை கடற்கரை சாலையில் வாகனங்கள் 20 கி.மீ வேகத்திலும், எஸ்.வி.பட்டேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணாசாலை, அண்ணா சாலையில் இருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து வீதிகளிலும் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் சாலையில் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை 30 கி.மீ. வேகத்திலும், அங்கிருந்து முள்ளோடை எல்லை வரை 50 கி.மீ வேகத்திலும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாலைகளில் குடியிருப்பு மருத்துவமனை கல்வி நிறுவனங்கள் குறுக்கிட்டால், 30 கி.மீ வேகத்தை தாண்ட கூடாதுசாலையில் செல்ல வேண்டிய வேக அளவு குறித்த எச்சரிக்கை பலகைகளும் ஆங்காங்கே அதிகமாக வைக்கப்பட்டுள்ளன.

பாரபட்சமின்றி அபராதம்
மேற்கண்ட அறிவிப்பை மீறி குறிப்பாக நகர பகுதிகளில் 30 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை போக்குவரத்து ஆய்வாளரான ஜெயராமன், புதுச்சேரியில் நிகழும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மிக வேகமாக வாகனங்களை இயக்கி வருவதே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே துறை தலைவரின் உத்தரவின் பேரில் நிர்ணயிக்கப்பட்டஅளவை விட வாகனங்களில் வேகமாக செல்வோர் மீது பாரபட்சமின்றி அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

பொய் சொல்ல முடியாத வாகன ஓட்டிகள்
இதற்காக வாங்கப்பட்டுள்ள பிரத்யேக கருவி மூலம் சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட வாகனம் பதுவையிலுள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாகனங்களில் நவீன கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 200 மீட்டர் தொலைவில் வரும்போதே வாகனத்தின் வேகத்தை காட்டிக் கொடுப்பதுடன், 100 மீட்டர் தொலைவில் வரும்போது குறிப்பிட்ட வாகனத்தின் பதிவெண், வேகம் போன்ற விவரங்களை காகிதத்தின் மூலம் ஆவணமாகவே நகல் எடுத்து கொடுத்து விடுகிறது. இதனால் போலீஸாரிடம் வாகன ஓட்டிகள் தாங்கள் மெதுவாக தான் வாகனத்தை இயக்கி வந்தோம் என சாக்கு சொல்ல முடியாது.












Click it and Unblock the Notifications