மன உளைச்சலா இருக்கு..புலம்பிய புதுச்சேரி ரங்கசாமி! அண்ணன் தங்கை சண்டை தான்! ஆறுதல் சொன்ன தமிழிசை!
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆட்சி செய்வதில் மன உளைச்சலோடு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறிய நிலையில், இது குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதேபோல அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்காளத்திலும் கூட இதே நிலைமைதான்.
அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர்கள் தலையிடுவதாகவும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பது போல் இருப்பதாகவும் முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டுள்ளதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு சீனா குறி... போர் விமானங்கள், டிரோன்கள் குவிப்பு- பயங்கர சதிக்கு ஸ்கெட்ச்?
புதுச்சேரி
அண்டை மாநிலமான புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து அரசின் அதிகாரத்தில் தலையிடுவதோடு முக்கிய கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பேசிய பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுச்சேரி சட்டசபையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சுயேச்சை எம்எல்ஏ நேரு உள்ளிட்ட பல அமைப்புகளில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
ரங்கசாமி புலம்பல்
மனுவை பெற்றுக் கொண்ட பிறகு பேசிய அவர்," மாநில அந்தஸ்து தரக்கோரி மத்திய அரசிடம் பலமுறை கேட்டோம் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் மக்களுக்கான பல விஷயங்களை செய்ய முடியாத நிலை இருக்கிறது இதனால் அதிக மன உளைச்சல் தான் ஏற்படுகிறது இது தொடர்பாக சட்டரீதியாக செய்ய வேண்டியதை செய்வோம் எனக் கூறியிருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது.
நாராயணசாமி கண்டனம்
மாநில அந்தஸ்து பெறுவதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக முதல்வர் கூறினார். ஆனால், இப்போது நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை. நினைப்பதை எல்லாம் செய்ய முடியவில்லை என்று புலம்புகிறார். முதல்வரின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லையா? ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அந்தஸ்து பெறுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாரா? அல்லது ஆதரவுதான் கேட்டாரா? இவர் புலம்புவதற்கு பின்னணி என்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் காங்கிரஸ் நாரயணசாமி.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில் இது குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை ," அரசு ஆள்வதில் அதிகாரிகளால் தனக்கு சிரமம் உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் அதிகாரிகளை அழுத்து பேசி சுமூக தீர்வு காணப்படும். குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது. தனக்கு வரும் கோப்புகள் அனைத்தையும் கோப்பாக பார்க்காமல் மக்களின் முகமாக பார்த்து ஒப்புதல் அளிக்கிறேன்
நல்லது நடக்கும்
மக்களை பாதிக்கும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் தான் பதில் கூற விரும்பவில்லை என்றாலும் புதுச்சேரிக்கு நல்லது நடக்கும். யாரும் மன உளைச்சலில் இருக்க கூடாது என்பது தான் தனது கொள்கை. அதிகாரத்தை பயன்படுத்தாமல் அன்பாக மக்களுக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கிறேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்தது தொடர்பாக பதில் அளித்த அவர்," நான் மருத்துவர் என்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தான் சர்க்கரை கொடுத்து கொல்ல முடியும், ஆனால் இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை அதனால் சர்க்கரை கொடுக்கலாம்.. அது இனிப்பு தானே" என்றார்.