வருது ஃபனி.. சுயமாக செலவு செஞ்சு மக்களை காப்பாத்துங்க.. புதுச்சேரி முதல்வர் உத்தரவு
Recommended Video
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுவை இடையே ஃபனி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி வரும் 30 ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்குமென்றும், அந்த நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரி மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வருவதால், புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இல்லை.. புயல் வட தமிழகம் நோக்கி நகர கூடும்.. பாலச்சந்திரன்
புதுவை முதல்வர் ஆலோசனை
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் புயல் கரையை கடக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்வர் அறிவுரை
அப்போது அதிகாரிகளிடம் பேசிய நாராயணசாமி, கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைப்பது, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அகற்றுவது, தாழ்வானப் பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புயல் கரையை கடந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்பே திட்டமிட வேண்டுமென்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
முதல்வர் பேட்டி
சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புயல் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள நகராட்சி ஆணையர்கள் ரூ.5 லட்சம் வரையிலும், மாவட்ட ஆட்சியர்கள் ரூ.10 லட்சம் வரையிலும் சுயமாக செலவிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று பஞ்சாயத்துக்கள் ரூ.2 லட்சம் வரை தனது சொந்த நிதியை பயன்படுத்த அனுமதித்துள்ளோம்.
பணிக்கு திரும்ப
மேலும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விடுப்பு எடுத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளோம். பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன். புயல் குறித்த தகவல் மற்றும் தொடர்புக்கு 1077 இலவச எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறினார்.