கடைசி நிமிடத்தில் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி மறுப்பு! பின்னணியில் நடந்தது என்ன! பரபர
புதுக்கோட்டை: இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தச்சங்குறிச்சியில் நடைபெற இருந்த நிலையில், அவை திடீரென ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே மாவட்ட நிர்வாகம் எதற்காகக் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகப் புதுக்கோட்டை உள்ளது. இங்கு கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புத்தாண்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு ஜன. 2ஆம் தேதி நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்.. அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்!
அனுமதி மறுப்பு
இதையடுத்து தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 6ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர். இதில் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி தர மறுத்துவிட்டனர்.
பதற்றம்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவு 3 மணி வரை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அங்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குக் கடைசி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மொத்தம் 4 காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
என்ன நடந்தது
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பார்வையாளர் கேலரி முறையாக அமைக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி முறையாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்து மாடுகள் வெளியேறும் கலெக்ஷன் பாயிண்ட ஒழுங்காக அமைக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆன்லைன் முறையில் மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என விதிமுறைகள் உள்ள நிலையில், அதில் 300 டோக்கன மட்டுமே ஆன்லைனில் விநியோகித்துவிட்டு, சுமார் 600 டோக்கன்களை தன்னிச்சையாகக் கிராம மக்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 4 காரணங்கள்
மேலும், ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு நிச்சயம் ஆர்டிசிபிஆர் சோதனை நடத்த வேண்டும். ஆனால், இதையும் அவர்கள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நான்கு காரணங்களுக்காகவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அடுத்துப் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அடுத்து எப்போது
முறையான அனுமதியைப் பின்பற்றாமல் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால்.. அதன் பிறகு ஒட்டுமொத்தமாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தச் சிக்கலாகிவிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டால்.. ஒரு சில நாட்களிலேயே அனுமதி தரப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதற்றம்
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் திட்டம் இல்லை என்றும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் கூறிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகக் கூறியுள்ள கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அங்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.