திடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடி
புனே: மகாராஷ்டிராவில் குடியரது தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அவசியம் இல்லை என்று அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ளது. ஆளும் சிவசேனா அரசுக்கு ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது.
இதை எதிர்பார்த்துக் காத்திருந்த பாஜக, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அம்பானி வெடிகுண்டு மிரட்டல்
அம்பானி வீட்டின் அருகே கடந்த மாதம் வெடிகுண்டு நிரம்பிய எஸ்யுவி கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்குதான் சிவசேனா அரசுக்கு எல்லா சிக்கல்களும் தொடங்கியது, அந்த வழக்கு தொடர்பான விசாரணை பல க்ரைம் திரைப்படங்களைவிடப் பரபரப்பாகச் சென்றது. முதலில் கார் உரிமையாளர் என்று கருதப்பட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதன் பின்னர் இது தொடர்பாக சச்சின் வாஸ் என்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் மீது புகார்
இந்தச் சம்பவம் ஓய்வதற்குள் ஐ.பி.எஸ் அதிகாரி பரம் பிர் சிங் என்பவர் மராட்டிய உள் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மும்பையில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் இருந்து மாதம்தோறும் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்துத் தர வேண்டும் என்று அனில் தேஷ்முக் போலீஸ் அதிகாரிக்கு வலியுறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
பாஜக வலியுறுத்தல்
இது போன்ற குழப்பமான ஒரு நிலைமை எப்போது ஏற்படும் என்று பாஜக காத்திருந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர்கள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அஜித் பவார் பதில்
இந்நிலையில் இது குறித்து அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அஜித் பவார் கூறுகையில், "போலீஸ் ஊழல் குறித்து தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் அமைச்சருக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்கும் வலியுறுத்துகிறது. ஆனால் மாநிலத்தில் அப்படி மோசமான ஒரு சூழ்நிலை தற்போது வரை ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மராட்டியத்தில் தற்போதைய நிலைமை
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைந்தது. பாஜக - சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மராட்டியச் சட்டசபையில் 175 எம்எல்ஏகளின் ஆதரவு இந்தக் கூட்டணிக்கு உள்ளது.