நாளை தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. திடீரென அறிவித்த கருணாஸ்.. என்னாச்சி?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென்று அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும்.
இந்த ஆண்டும் 115வது தேவர் ஜெயந்தி, 60வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியலில் அண்ணாமலை ஒரு கோமாளி.. அவரை பற்றி கேள்வி கேட்காதீங்க.. கோவையில் கொதித்த செந்தில் பாலாஜி
நாளை முத்துராமலிங்க தேவர் குருபூஜை
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரை வங்கியில் இருந்த தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
நாளை குருபூஜை நடப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், பிற அமைப்புகளின் நிர்வாகிகள் பசும்பொன்னுக்கு செல்ல உள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ட்ரோன் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
கருணாஸ் வெளியிட்ட ஆடியோ
இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ மொத்தம் 1.56 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக கருணாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான ஆடியோவில் கருணாஸ் பேசியதாவது:
விமான நிலையத்துக்கு தேவர் பெயர்
வணக்கம், நான் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளை சார்பாக நாளை நடக்க உள்ள பசும்பொன் முத்துராமலிங் தேவர் குருபூஜை விழாவில் 50 ஆண்டு கால கோரிக்கைகையை வலியுறுத்தி எனது சொந்த இடத்தில் அன்னதானம் வழங்க உள்ளேன். மதுரை விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரை நூற்றாண்டு காலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தொடர் கோரிக்கை
இதுதொடர்பாக நான் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, இதற்கு முன்பு இருந்த முதல் அமைச்சர், தற்போதைய முதல் அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கையாக வலியுறுத்தினேன். சட்டசபையிலும் இதுபற்றி பேசி இருக்கிறேன். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து அரங்கம் அமைத்து இருந்தேன். அதை எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் கமுதி டிஎஸ்பி தன்னிச்சையாக அரங்கை அகற்றி உள்ளார். வருவாய்த்துறை, நிர்வாகிகள் ஆலோசனை இன்றி அகற்றி உள்ளார். இதனை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.
சாகும்வரை உண்ணாவிரதம்
மேலும் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நான் பசும்பொன்னில் எனது சொந்த இடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்துள்ளேன்''என்றார். மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை உள்ளது. இருப்பினும் தற்போது வரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.