இமானுவேல் சேகரன் நினைவு நாள்.. ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த வாலிபரை தாக்கிய மின்சாரம்-அதிர்ச்சி
ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன். ராணுவத்தில் சேவையாற்றிய இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து பல போராட்டங்களை நடத்தினார்.
இவரது 65வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. உதயநிதி ஸ்டாலின், ஆர்பி உதயகுமார் அஞ்சலி.. பரபரப்பில் பரமக்குடி!
நினைவிடத்தில் அஞ்சலி
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதபோல் பிற தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் இருந்தும் திரளானவர்கள் சென்றனர். இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில் நிலையத்தில் சில இளைஞர்கள் கொடிகளை கையில் வைத்து அசைத்து கொண்டிருந்தனர்.
ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த இளைஞர்
அப்போது சிலர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த என்ஜின் மீது ஏறினர். தேவக்கோட்டையை சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் தான் கையில் வைத்திருந்த கொடியை தலைக்கு மேலே தூக்கி வேகமாக அசைத்தார். அப்போது அங்கு சென்ற மின்வயர் மீது கொடி பட்டது. இதனால் உடனடியாக மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து அவரை மற்றவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த இளைஞரை மின்சாரம் தாக்கும் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
144 தடை உத்தரவு
முன்னதாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து வரக்கூடாது ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தான் ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.