சரவெடி சாயல்குடி.. கந்தூரி விழாவில் இந்து, முஸ்லீம்கள்! விடிய விடிய கறி விருந்து! இதுதான் தமிழ்நாடு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள பிள்ளையார்குளத்தில், மதநல்லிணக்க கந்தூரி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனை நடத்தினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு விடிய விடிய கறி விருந்து அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் சுமார் 310 ஆண்டு பழமையான அரக்காசு அம்மா தர்ஹா உள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சந்தனகாப்பு கந்தூரி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்துக் கடவுளின் பெயரை தாங்கிய கிராமத்தில், ஜீவ சமாதி அடைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு, இந்துக்களால் ஆண்டு தோறும் விழா எடுப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

தர்கா வரலாறு
முந்தைய காலத்தில், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வணிகம் செய்வதற்காக மாட்டு வண்டிகளில் தனுஷ்கோடி பகுதிகளுக்குச் செல்லும் பொழுது, அங்கு வாழ்ந்த இஸ்லாமிய சிறுமி ஒருவர், வணிகத்திற்குச் சென்றவர்களுடன் வந்து, இந்த பிள்ளையார் குளத்தில் தங்கியுள்ளார். இந்து குடும்பங்களுடன் இருந்து வந்த அந்த சிறுமி, பருவம் அடைந்த பின்னர் அவரைச் சார்ந்த உறவுகள் அழைத்தபோதும், அவர்களுடன் செல்ல மறுத்து, இந்த ஊரிலேயே, கன்னியாக ஜீவசமாதி அடைந்ததாக அரக்காசம்மன் தர்கா வரலாற்றில் கூறப்படுகிறது.

கந்தூரி விழா
ஜீவ சமாதி அடைந்த இஸ்லாமிய பெண்ணுக்கு, ஆண்டுதோறும் சந்தனகாப்பு கந்தூரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம் தர்ஹாவில் கொடியேற்றத்துடன் கந்தூரி திருவிழா தொடங்கியது. உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. பின்னர், தர்ஹாவில் புனித சந்தனம், அக்தர் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடிவ போர்வை போற்றப்பட்டு, மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

அசைவ விருந்து
இதனையடுத்து, நாட்டு கோழி, ஆடு பலியிடப்பட்டு சமத்துவ அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. சாயல்குடி பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதில், கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் 1000 கிலோ ஆட்டு கறி சமைத்து கிராமம் சார்பில் அசைவ சம பந்தி விருந்து மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வழங்கப்பட்டது.

மத நல்லிணக்க விழா
இந்த கிராமத்தின் சுற்று வட்டார பகுதியில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அரக்காசம்மன் தர்காவில் வழிபட்டனர். நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மத மோதல்கள் வெடித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சூழ்நிலையில், பிள்ளையார்குளம் கிராம மக்கள், இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications