"சாப்பாடு வாங்க ஓட்டலுக்கு போயிருந்தேன்.. தெரியாம போட்டுட்டேன்.. மன்னிச்சிருங்க.. யார் இந்த பரிமளா?
சேலம் பரிமளாவிடம் விசாரணை நடந்து வருகிறது
சேலம்: "மோடி கதையை முடிங்கப்பா... இன்னும், ஐந்து வருசம் இருந்தா இந்தியா அப்படியே, 50 ஆண்டு பின்னாடி போய்டும்... மனித வெடி குண்டு வேண்டும்னா சொல்லுங்க.. நான் வாரேன்' என்று பிரதமருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட கோர்ட் ஊழியர் பரிமளாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
யார் இந்த பரிமளா? சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்.. வயது 39 ஆகிறது.. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருக்கும் இலவச சட்டப் பணிகள் ஆணைய அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்.. இவரது மகள் சட்டக்கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தன்னை சமூக ஆர்வலர் அடையாளப்படுத்திக் கொண்டு, சோஷியல் மீடியாவில் நிறைய கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.. அதில் பெரும்பாலும் அரசு மீது அவதூறு கருத்துகளையே கூறியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.
பிரதமர் மோடி
சில தினங்களுக்கு முன்புகூட "மோடி கதையை முடிங்கப்பா... இவனெல்லாம் இன்னும், ஐந்து வருசம் இருந்தா இந்தியா அப்படியே, 50 ஆண்டு பின்னாடி போய் விடும். மனித வெடி குண்டு வேண்டும்னா சொல்லுங்க நான் வாரேன்' என்று பதிவிட்டிருந்தார்.. பரிமளாவின் ஐடி-யில் இருந்து இந்த பதிவு போடப்பட்டிருந்தது.. இதனை பலரும் ஷேர் செய்த நிலையில் பாஜக தரப்பினர் பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
விசாரணை
பிரதமருக்கு எதிராக வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுத்திருந்ததால், பரிமளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் போலீஸ் கமிஷனர் ஆபிசில் மாவட்ட பாஜகவினர் புகார் தந்தனர்.. இதையடுத்து பரிமளா விரைவில் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சரோஜா
கமிஷனர் உத்தரவின் பேரில் சேலம் சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், காவல் ஆய்வாளர் சரோஜா, மற்றும் போலீசார் பரிமளாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.. நேற்று கோர்ட் முடிந்ததும் பரிமளாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.. 10 மணி வரை இந்த விசாரணை நடந்தது.. தற்போதும் விசாரணை நடக்கிறது..
மன்னிப்பு
இதனிடையே பரிமளா, தன் பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.. அதில், "கடந்த பிப்ரவரி 25ம் தேதி இரவு சாப்பாடு வாங்க ஓட்டலுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்த நிலையில், சில நண்பர்கள் எனக்கு போன் செய்து, பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்வு இருப்பதாக சொன்னார்கள். உடனடியாக அந்த பதிவை அழித்து விட்டேன். இந்திய இறையாண்மைக்கும், அரசு பொறுப்பாளர்களுக்கும் எந்த வித மிரட்டலும் என்னால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை.
உறுதி அளிக்கிறேன்
நான் இந்திய இறையாண்மை, நாட்டின் மீதும், பாரத பிரதமர் மோடி மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். எப்படியோ துரதிஷ்டவசமாக அந்த பதிவு பதியப்பட்டு விட்டது. வேண்டுமென்றே பதியப்படவில்லை. இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
எனினும், பரிமளாவின் ஃபேஸ்புக் பதிவு ஆபத்தானது என்றும் அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.