உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தப்பில்லை.. "ஆனால்.." இழுத்து சொல்லும் எடப்பாடி
சேலம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் எனவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், "கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறினார். வருண பகவான் மழை பெய்து கொண்டே இருக்கிறார். நானும் நனைகிறேன். நான் ஒரு விவசாயி. இந்த ஆட்சியை கண்டோ, மழையை கண்டோ அஞ்சமாட்டோம் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? என்று கேட்டார். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். ஆனால் திமுகவில் அப்படியா இருக்கிறது. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல உள்ளது. திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்று வரும் ஊழலுக்கு அவர் தலைமை ஏற்பார்.
தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா?" என விமர்சித்த அவர் குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய், நூறு நாள் வேலை வாய்ப்புறுதி திட்டத்தில் கூலி உயர்வு என பல தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை. புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்












Click it and Unblock the Notifications