இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த திமுக நிர்வாகி.. தீக்குளித்து தற்கொலை.. பதற்றம்!
சேலம்: இந்தி திணிப்புக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகளில் திணித்து வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு போராட்டங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தாழையூர் 18 ஆவது வார்டு திமுக கிளை அலுவலகம். இந்த அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிராக எத்தனையோ தீரர்களை இழந்துவிட்டோம்.. இனியும் வேண்டாம்.. முதல்வர் வேதனை
நிர்வாகிகள்
அங்கிருந்த நிர்வாகிகளும் நிச்சயம் நடத்துவோம் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர். அப்போது தங்கவேல் மட்டுமே அங்கிருந்ததாக தெரிகிறது. அவர் அங்கிருந்த ஒரு பலகையில் "மத்திய அரசே மோடி அரசே இந்தியை திணிக்காதே, தாய்மொழி தமிழ் இருக்க கோமாளி மொழி இந்தி எதற்கு" என எழுதியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர்
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த பெரியவரிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இந்தி திணிப்புக்கு எதிராக வாசகம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரவர் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்ட நிர்வாகி
அப்போது திடீரென தங்கவேல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். அவருடைய அலறல் சப்தம் கேட்டு மக்கள் அங்கு ஓடி வருவதற்குள் தங்கவேலின் உடல் முழுமையாக எரிந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை ஏன்
தங்கவேல் தற்கொலை செய்து கொண்டது குறித்த அறிந்த திமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். உயிரிழந்த தங்கவேலுவுக்கு ஜானகி (75) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இந்தி திணிப்பு போராட்டத்திலும் தங்கவேல் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த போராட்டம் அடுத்தடுத்து மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இந்தியை திணிக்காதவகையில் இருக்க ஏதுவாகவும் இருந்தது.
தங்கவேலின் மனைவி
இதுகுறித்து தங்கவேலின் மனைவி ஜானகி கூறுகையில், காலையில் வேலைக்கு சென்று வருவதாகத்தான் கூறினார். ஆனால் இப்படி செய்வார் என நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவர் வேலை செய்துதான் என்னை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரே போய்விட்ட பிறகு நான் ஆதரவின்றி உள்ளேன். நான் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மும்மொழி கொள்கை
தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நாடாளுமன்ற அலுவல் மொழி உள்ளிட்டவை மூலம் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தென்னிந்திய அரசுகள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, அதை திணிப்பதைதான் எதிர்க்கிறோம் என திமுக சொல்கிறது. இந்தி எனும் ஒரு மொழியை கூடுதலாக கற்றுக் கொண்டால் அது மாணவர்களுக்கு நன்மைதானே என்கிறது மத்திய அரசு!. இப்படியாக இரு தரப்பும் மாற்றி மாற்றி கூறி வரும் நிலையில் ஒரே நாடு ஒரே மொழி என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.