ரூ. 5 கோடி செலவு செய்ய முடியும்.. திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்து டிஸ்மிஸ் ஆன திலகவதி!
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த தற்காலிக ஊழியர் திலகவதி தேர்தல் நடத்தை விதிமீறல் அடிப்படையில் பணி நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராமன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தங்கள் குடும்பமே
திமுக குடும்பம் என்றும் தேர்தலில் போட்டியிட்டால் 5 கோடி வரை செலவு செய்ய முடியும் என்று கூறினார்.
திலகவதி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தலைவாசல் வட்டார மேலாளராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் ஆவார்.
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவர், பி.எஸ்.சி அக்ரி பட்டம் பெற்றவர் ஆவார். சேலம் தலைவாசல் வட்டார வேளாண் துறை உதவி தொழில்நுட்ப மேலாளராக தலைவாசல் வட்டார வேளாண் அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.
ஏற்காடு தொகுதி
திலகவதிக்கு எம்எல்ஏ ஆகும் ஆசை இருந்திருக்கிறது. அவர் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தது குறித்து,சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனிடம் புகார் வந்தது.
விசாரணை அறிக்கை
இதை தொடர்ந்து, திலகவதி விருப்பமனு தாக்கல் செய்தது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . விசாரணையில் திலகவதி ஏற்காடு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தது உறுதியானது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடத்தில் அவர்கள் அறிக்கை அளித்தனர்.
பணிநீக்கம்
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர் பணியில் உள்ள போதே ஒரு கட்சி சார்பான நடவடிக்கையில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராமன் வேளாண்துறை அதிகாரிகள் தந்த அறிக்கையின் அடிப்படையில் திலகவதியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
திமுக குடும்பம்
இதனிடையே ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த திலகவதி கூறுகையில்,'' என் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.கவில் உள்ளார்கள். திமுக மகளிரணியில் தொண்டரணி துணை அமைப்பாளராக இருக்கிறேன். மக்கள் சேவை செய்வதற்காக நான் கல்யாணம் கூட செய்யவில்லை.
விருப்ப மனு ஏன்
ஏற்காடு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் பணி புரிந்துள்ளேன் என்னை பலருக்கும் தெரியும். எனவே தான் விடுமுறை எடுத்து விட்டு ஏற்காடு பகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். தேர்தலுக்காக 5 கோடி வரை செலவு செய்ய என்னால் முடியும் '' என்று ஊடகங்களிடம் கூறியிருக்கிறார் திலகவதி