கைகளில் மண்ணெண்ணெய் கேன்.. கண்களில் கண்ணீர்! திமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்! பரபரத்த சேலம்
சேலம் : நான்கரை கோடி சொத்து மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டு தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.
Recommended Video
தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் ஆட்சியரிடம் மனு அளிக்கும் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சீலநாயக்கன்பட்டி பகுதியை ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்வதி, அருள்சக்தி, செல்வமணி ஆகிய மூன்று பெண்கள் வந்தனர்.

பெண்கள் தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராளமானோர் காத்திருந்த நிலையில், மூன்று பெண்களும் அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மூன்று பேரும் தலையில் ஊற்றி ஆட்சியர் வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீரை எடுத்து ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

நில அபகரிப்பு புகார்
அப்போது அவர்கள் ஆட்சியரை சந்திக்காமல் செல்லப் போவதில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கூறும் போது எங்களுக்கு சொந்தமான நான்கரை கோடி மதிப்புள்ள நான்காயிரம் சதுர அடி நிலத்தை திமுகவை சேர்ந்த சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் மஞ்சுளா நாராயணன் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டனர்.

திமுக பிரமுகர் மிரட்டல்
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர் . இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் அன்னதானப்பட்டி காவல் துறையினர் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தகாத வார்த்தையில் பேசி நிலத்தை மீட்டு தர முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும் திமுக பிரமுகர் சீனிவாசன் உங்கள் குடும்பத்தை அழித்து விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

போலீசார் நடவடிக்கை
வேறுவழியின்றி அவர்களிடம் சாவதைவிட நாங்களே உயிரை மாய்த்துக் கொள்கிறோம் என கூறி இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றோம்" என தெரிவித்தனர். இதன் பிறகாவது மாவட்ட ஆட்சியர் எங்களுடைய புகாரின் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications