சேலத்தில் பலத்தை காட்டிய தவெக! அனல்மின் ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்! குவிந்த விஜய் கட்சி நிர்வாகிகள்
சேலம்: சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் செய்து வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மற்றும் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதால், கடந்த சில நாட்களாக தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்து வந்தனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தந்த தவெக
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 10 நாட்களாக தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தவெகவினர் இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவர் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தியும் எந்த விட முடிவும் கிடைக்காத நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் தவெகவினர் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த அழைப்பின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்
ஆனால் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், முதல்வர் மு.க ஸ்டாலினை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர். சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வரை தவெகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று கூறினார்.
மக்கள் பிரச்சினைக்கு போராட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று கூறி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறியுள்ளார். மாநாடு, அம்பேத்கர் புத்த வெளியீட்டு விழாவில் பேசும் போது கூட திமுக என்றோ, பாஜக என்றோ வெளிப்படையாக விமர்சிக்காத விஜய், சர்வதேச பெண்கள் தினத்தன்று பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத திமுக அரசை நாம் எல்லாரும் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து மாற்றுவோம் என்று கூறினார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் இனி மக்கள் பாதுகாப்புக்காக களத்தில் இறங்கி போராடும் என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் செய்வார்கள் என்று விஜய் கூறியிருந்தார். அதன்படி சர்வதேச பெண்கள் தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் இன்று சேலம் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications