ஆமா.. உப்பு போடாமதான் சாப்பிடுறேன்! காட்டமாக விமர்சித்த அண்ணாமலைக்கு அமைச்சர் நேரு ‘கிண்டல்’ ரிப்ளை!
சேலம் : உதயநிதி ஸ்டாலின் மகனுக்கும் 'வாழ்க' கோஷம் போடுவேன் என்கிறார் அமைச்சர் நேரு. சூடு, சொரணை இல்லையா, உப்பு போட்டு சாப்பிடுகிறாரா இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "ஆமாம்.. எனக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் உப்பு போடாமல் தான் சாப்பிடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது மகன் அரசியலுக்கு வந்தாலும் வாழ்க என்று தான் சொல்லுவோம் என்றும் வாரிசு அரசியல் என எங்களை யாரும் மிரட்டிவிட முடியாது எனவும் அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் பேசி இருந்தார்.
இதனை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வயதில் குறைந்த உதயநிதிக்கு அமைச்சர் கே.என்.நேரு வாழ்க கோஷம் போடுகிறாரே சூடு சொரணை இல்லையா என கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார். அதற்குத்தான் கிண்டலாக பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் நேரு.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, அவருக்குப் பிறகு, முக.ஸ்டாலின், அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் என ஒரே குடும்பத்தினர் அதிகார மட்டத்திற்கு வந்திருப்பது பற்றி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவரை அமைச்சராக நியமித்ததில் என்ன தவறு என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உதயநிதி மகன் வந்தாலும்
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் தொடர்பாக சமீபத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கருணாநிதியின் குடும்பத்திற்கு தி.மு.கவினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். தி.மு.கவைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கு என்றும் நேர்மையோடு பணியாற்றி அவர்களோடு இருந்து பாடுபடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு இருப்போம். உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்று சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் திமுகவினர் எனப் பேசி இருந்தார்.

சூடு சுரணை இல்லையா?
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அமைச்சர் கே.என்.நேரு சொல்கிறார்.. உதயநிதி என்ன, இன்பநிதி வந்தாலும் நாங்கள் வாழ்க கோஷம் போடுவோம் என்கிறார். உங்களுக்கு தன்மானம் இல்லையா? வயதில் குறைந்த உதயநிதிக்கு வாழ்க கோஷம் போடுகிறீர்களே.. உங்களுக்கு சூடு சுரணை இல்லையா, சாப்பாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிறாரா இல்லையா?" என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். மேலும் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.

மத்திய அமைச்சர்களின் ஊழலையும் வெளியிடுவார்
இந்நிலையில், சேலத்தில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "அண்ணாமலை, அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன் எனச் சொன்னார் எனச் சொல்கிறார்கள். அவர் மத்திய அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவார்" எனக் கூறினார்.

நேரு கிண்டல் பதில்
மேலும், அமைச்சர் நேரு, உதயநிதி ஸ்டாலினுக்கு 'வாழ்க' கோஷம் போடுகிறார்.. சூடு, சொரணை இல்லையா, உப்பு போட்டு சாப்பிடுகிறாரா இல்லையா என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "ஆமாம்.. எனக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் உப்பு போடாமல் தான் சாப்பிடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications