வெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்!
மஜூலா சிங்கபுரா: சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெளிநாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் செல்லலாம் என அந்த நாடு கூறியுள்ளது. ஆனால் அவர்கள் 14 நாட்கள்தான் தங்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்த நாடு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போடனுமா.. உங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? ரொம்ப சிம்பிள்தான்.. பாருங்க
கடும் கட்டுப்பாடு
ஆசியாவில் வளர்ந்த நாடான சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனால் அந்த நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாடுகளில் இருந்து அங்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா நாடான சிங்கப்பூரில் வெளிநாட்டினர் வருகை இல்லாமல் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அனுமதி
இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் குறிப்பிட்ட அளவில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க அந்த நாடு முடிவு செய்துளளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்
சிங்கப்பூரின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறக்க புதிய பயண முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. Segregated Travel Lane (STL) என்ற புதிய ஒதுக்கப்பட்ட பயண முறை, சிங்கப்பூரின் எல்லைகளை வெளிநாட்டில் உள்ள வர்ததகர்கள், தொழில் அதிபர்களுக்கு பாதுகாப்பாகத் திறந்துவிட வழிவகுக்கும்.
14 நாட்கள் மட்டுமே...
புதிய பயண முறையின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் குறுகிய கால அனுமதியில் 14 நாட்கள் மட்டுமே தங்க முடியும். வர்த்தகம், பொருளியல் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பிசிஆர் சோதனை கட்டாயம்
வெளிநாட்டுப் பயணிகள் அவர்கள் தங்கும் நாள்களில் வழக்கமான மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தங்க முடியும்.5 பேருக்கு மேல் ஒரு குழுவாக அவர்கள் ஒன்று சேர முடியாது. அந்தக் குழு உறுப்பினர்கள் மற்ற குழுக்களைச் சந்திக்கவும் கூடாது.வெளிநாட்டுப் பயணிகள் அவர்களது நாட்டில் இருந்து வருவதற்கு முன்பு PCR சோதனைகளைச் செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பித்தல் அவசியம்
சிங்கப்பூர் வந்த பிறகும் அந்தப் பயணிகளுக்கு PCR சோதனைகள் செய்யப்படும். வெளிநாட்டுப் பயணிகளால் உள்ளூர் அளவில் நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.சிங்கப்பூருக்கு வருவதற்கு அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து விண்ணப்பிக்கலாம். உரிய அனுமதி கிடைத்தவர்கள் மட்டுமே நாட்டிற்குள் வரமுடியும்.
மீட்டெடுக்க முடியும்
இந்த முறையின்மூலம் சிங்கப்பூரில் வர்த்தகக் கூட்டங்களை நடத்தமுடியும். சிங்கப்பூரை விமானப்போக்குவரத்து முறை முன்பு இருந்தது போன்று முக்கியத்துவம் பெறவும், சுற்றுலாத்துறையை பழைய நிலைமைக்கு கொண்டு வரவும் முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் பயன்பாடு
இந்த நிலையில் பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறுகையில், பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதியில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
முன்னுரிமை
5.7 மில்லியன் மக்களுக்கும் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் போதுமான தடுப்பூசிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும். தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை விளக்குவதற்காக நானும்,சக அமைச்சர்களும் ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டு கொள்வோம். முன்கள பணியாளர்கள், வயதானவர்கள், நோயுற்றவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.