மாஜி அமைச்சர் பாஸ்கரனுக்கு சிக்கல்.. கோயில் நிலம் ஆக்கிரமிப்பா? அறநிலையத்துறை எடுத்த அதிரடி
சிவகங்கை: சிவகங்கையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு அறநிலையத்துறை சீல் வைத்துள்ளது.
சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கௌரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் - பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
சிவகங்கையில் கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமான உறவினர் மோசடியாக பத்திரம் தயாரித்து நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் வந்த நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமான உறவினர்கள் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினாராம். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர்.

காஞ்சிபுரம் கோயில்
கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கூறினார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அண்மையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. அந்த கோயிலின் நிலத்தில் இருந்த பள்ளியை இந்து அறநிலையத்துறையே நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிலங்கள் பட்டியல்
முன்னதாக வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலமும் இந்து அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் விவரம் இணையதளங்களில் ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு நிலங்கள் உள்ளன. எந்தந்த நிலங்கள் கோயில் நிலங்கள் என்பதை வெளிப்படையாக அறிய முடியும்.

தமிழக அரசு அதிரடி
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னமும் பல்வேறு கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications