சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது.
அனைத்து மக்களும் ஒற்றுமையாக, நன்மையுடன் வாழ வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டன்ர்.
முகம் நிறைய மகிழ்ச்சி, மனதில் உற்சாக வெள்ளம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் என கைகளில் கரும்புகளை ஏந்தி சமத்துவப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி சந்தோஷம் அடைந்தனர் மாணவ, மாணவிகள்.
பொங்கல் விழா
பொங்கல் பானை, இனிப்பு கரும்பு, வண்ண, வண்ண கோலங்கள், விளையாட்டு போட்டிகள் என பாரம்பரியம் மாறாமல் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.
விளையாட்டு போட்டி
சமத்துவ பொங்கல் விழாவை ஒட்டி, விளையாட்டு, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடு
மண்மனக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
'பொங்கலோ, பொங்கல்'
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாணவர்கள் அனைவரும் 'பொங்கலோ, பொங்கல்' என பாடி இறைவனை வழிபட்டனர். பின்னர், சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.