கோலி, ரோகித் கொடுத்த மரண அடி.. இனி பேச்சுவார்த்தைக்கு அவசியமே இல்லை.. சிக்கலில் கம்பீர், அகர்கர்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ஒருநாள் அணியை கட்டுப்படுத்த முடியாமல் கம்பீர் திணறி வருவதாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 302 ரன்களை விளாசி தள்ளினார்.

இதனால் தொடர் நாயகன் விருதை விராட் கோலி கைப்பற்றினார். ரோகித் சர்மாவும் 3 இன்னிங்ஸில் 2 அரைசதங்கள் உட்பட 146 ரன்களை விளாசினார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 38 வயதை எட்டியுள்ளனர். இதனால் 2027 உலகக்கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் 2027 உலகக்கோப்பை தொடருக்காக இருவரும் தயாராகி வருவது வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது. ஏனென்றால் 2024 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற போதே இருவரும் ஓய்வை அறிவித்து சென்றனர். அதேபோல் 2025 - 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இருவரும் ஓய்வை அறிவித்தனர்.
இவர்கள் இருவருமே ஐசிசி தொடருக்கு இந்திய அணி தயாராவதற்கு முன்னதாகவே தங்களின் முடிவை கூறிவிடுவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வை அறிவிக்காத போதே, ரசிகர்களுக்கு அவர்களின் இலக்கு என்னவென்பது தெரிந்துவிட்டது. ஆனால் பிசிசிஐ நிர்வாகமோ இரு சீனியர் வீரர்களை ஓய்வுக்கு தள்ள முயற்சித்து வருகிறது.
இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாக ஆடிய போது, இன்னும் எந்த முடிவையும் சொல்ல முடியவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாக கவுதம் கம்பீர் கூறி வருகிறார். ஆனால் 2026 மட்டுமே இன்னும் இருப்பதை கம்பீர் மறந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் இருவரும் தயாராகி வந்தனர். ஆனால் இருவருமே உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்தி இருக்கும் சூழலில், அவர்களுக்கு வேறு வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இவர்கள் இடம்பெறுவார்கள்.
அதேபோல் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்பீர், ஒருநாள் அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதற்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே காரணமாக நிற்கிறார்கள். இதனால் கம்பீர் அடுத்தக் கட்டமாக என்ன திட்டத்தில் ஈடுபடுவார் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications