இலங்கையில் முஸ்லிம்கள் தாக்குதல்- வடமாகாணத் தமிழர்கள் கடையடைப்பு போராட்டம்
யாழ்ப்பாணம்: இலங்கையின் அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களைக் கண்டித்து தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அளுத்கம, பேருவளையில் முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் கொடுந்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் மூவர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து அகதிகளாயினர்.
இந்த வன்முறையைக் கண்டித்து தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் 3 நாட்களாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழர் வாழும் வடமாகாணத்தில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இந்தக் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மன்னாரில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இணைந்து அடையாள எதிர்ப்பு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். மேலும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலம் நடத்தினர்.
கொழும்பில் போராட்டம்
இதனிடையே தலைநகர் கொழும்பில் முஸ்லிம்கள் இன்று தங்களது வர்த்தக நிறுவனங்களை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications