இலங்கையில் இந்தியாவின் போர்க்கப்பல்- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்.. 'கை நீட்டி' வரவேற்கும் ரணில்!
கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல் முகாமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்ள உள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) நிதி உதவி பெற்றாக வேண்டிய நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இரு கரம் நீட்டி வரவேற்க உள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சேக்கள்தான் ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதன் முக்கிய குற்றவாளிகள். அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள், சர்வதேச மனித உரிமை சட்டங்களை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் ஈவிரக்கமே இல்லாமல் ஈழத் தமிழர்களை படுகொலை செய்தனர். இதனால் இலங்கை மீது சர்வதேச சமூகம் கடும் அதிருப்தியில் இருந்தது.
மிரட்டலுக்கு அடிபணியும் நாடு அல்ல இந்தியா.. சீனாவால் இதை உலகமே தெரிந்துகொண்டது - ஜெய்சங்கர் பேச்சு
இந்நிலையில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் கொந்தளித்த இலங்கை மக்கள் இனப்பாகுபாடுகளுக்கு அப்பால் புரட்சியில் ஈடுபட்டனர். உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது இந்தப் புரட்சி. அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு மரண பயத்தை காட்டியது இந்தப் புரட்சி. இதனால் அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து விலகி உயிரைக் காப்பாற்ற தப்பி ஓடினர். பின்னர் இருவரும் இலங்கை திரும்பினர். இந்த கால கட்டத்தில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச நாடுகளிடம் நல்லுறவு கொண்டவராக கருதப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்கே. அவரால் சர்வதேச சமூகத்திடம் இருந்து கணிசமான நிதி உதவியைப் பெற்று இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கேவால் இதனை செய்ய முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்கேவின் ஒற்றை கடைசி நம்பிக்கையாக இருப்பது சர்வதேச நாணய நிதியம்தான்.
இந்நிலையில் இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பொருளாதார பேரழிவில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே இந்தியா பெருமளவு நிதி உதவி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். டெல்லி, இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. இலங்கை திருகோணமலை துறைமுகம், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 390 பேருடன் இந்திய போர்க்கப்பல் இலங்கை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.