பிரசாரத்தின்போது தொண்டரை தாக்கிய ராஜபக்சே! பரபரப்பு வீடியோ
கொழும்பு: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது தொண்டர் ஒருவர், ராஜபக்சே மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே அவரை நோக்கி தாக்கினார்.
பின்னர் அவரது பாதுகாவலர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினர்களும் அவரை சமாதானப்படுத்திஅழைத்து சென்றனர்.
பின்னர் மேடையில் ஏறிய ராஜபக்சே, எதுவும் நடக்காதது போல் தொண்டர்களை நோக்கி கையையும் அசைத்தார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதனிடிடையே நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமாரா, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ராஜபக்சே தனது குடியுரிமைகளை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராஜபக்சே, வாக்காளர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் அனுரா குமாரா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.