இலங்கையில் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ்! அதிபர் மைத்ரிபால தலைமையில் சிறப்பான வரவேற்பு!!
கொழும்பு: போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் இலங்கை வருகை தந்துள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் போப்பாண்டவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஆசிய நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு 3 நாள் பயணமாக போப்பாண்டவர் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
விமான நிலையத்தில் இலங்கையின் முப்படை சார்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக போப்பாண்டவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
போப்பாண்டவரின் இந்த பயணத்தின் போது சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. காலி முகத்திடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறது. மேலும் ஜோசப் வால்ஸ் அடிகளாரை புனிதராக போப்பாண்டவர் பிரகடனப்படுத்த உள்ளார்.
பின்னர் ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கில் உள்ள மன்னார் மடு தேவாலயத்துக்கு போப்பாண்டவர் செல்கிறார். வரும் 15-ந் தேதி காலை வரை இலங்கையில் போப்பாண்டவர் தங்கியிருப்பார். அதன் பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அவர் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார்.
போப்பாண்டவரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.