இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்பு
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதிபர் ஆட்சி முறை கொண்ட இலங்கையில் பிரதமரையும், எம்.பி.க்களையும் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் களம் கண்டன.
இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்படுகிற நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்களை 'வளைத்து' ஆட்சியை ரணிலால் அமைக்க முடியும்.
இந்த நிலையில் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் 15-வது பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
4வது முறை பிரதமர்...
கடந்த 1993, 2001 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக ரணில் வகித்திருக்கிறார். தற்போது 4-வது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.