ரஜினி இலங்கைக்கு வருவது சிறப்பான விஷயம்! - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
யாழ்ப்பாணம்: நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்து, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, 150 வீடுகளை இலவசமாக தனது ஞானம் அறக்கட்டளை மூலம் கட்டித் தருகிறது லைகா நிறுவனம்.

வரும் ஏப்ரல் 9 மற்றும் 10 ம் தேதி இதற்கான விழா யாழ்ப்பாணத்தில் நடக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தத் தகவல் வெளியான உடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சிலர், ரஜினி இலங்கைக்குப் போகக் கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைகா நிறுவனம் இலவசமாக வீடுகள் கட்டித் தருகிறது. சில மாதங்களுக்கு முன் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நானும் பங்குபெற்றிருந்தேன். தற்போது அந்த வீடுகளைக் கையளிப்பதற்காக பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களை லைகா நிறுவனத்தினர் அழைத்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அவர் தமிழ் திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகர், மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்றவர். அவர் வருவது ஒரு சிறப்பான தருணத்தை நிறைவேற்றுவதற்காக. ஆகபடியால், அவர் வருகையை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்த விஷயம் சிறப்பாக நிறைவேற எல்லோரும் உதவி செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications