திரும்ப திரும்ப பொய்.. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. இலங்கை மீண்டும் பிடிவாதம்
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு எதுவும் நடத்தவில்லை என்று இலங்கை கடற்படை மீண்டும் பிடிவாதமாக மறுத்துள்ளது.
கொழும்பு: இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவர் பலியானார். இந்தக் துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என்று நேற்று மறுத்த இலங்கை கடற்படை இன்று மீண்டும் அதே பொய்யை திரும்ப சொல்லி இருக்கிறது.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ இலங்கை கடற்படையில் நேற்று முன் தினம் நடுகடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற சரோன் என்ற மீனவரும் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்கச் செய்த நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சகம், ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் இலங்கை கடற்படைக்கும் தொடர்பில்லை என்று கூறியது.
மனிதநேயமாம்..
இலங்கையின் அனைத்து அரசுத் துறையினரும் இந்திய மீனவர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்பதில், இலங்கை அரசு உறுதியாக இருப்பதாக இலங்கை அரசு கூறியது. மேலும் இந்திய அதிகாரிகளின் துணையுடன் முழு விசாரணை நடத்தப்படும் என்றும், பின்னர் அதன் அடிப்படையில் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியது.
நம்பத் தயாரில்லை..
துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என்று இலங்கை அரசு சொன்னதை தமிழக மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் பொய்
இந்நிலையில், மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்று இலங்கை கடற்படை மீண்டும் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தளபதியின் கட்டளைககளை மீறி எந்த வீரரும் துப்பாக்கியை பிரயோகிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை கடற்படையினர் பொய் கூறியுள்ளது.
இருப்பது இதுதான்..
எல்லை தாண்டி மீன் பிடித்ததால் இதுவரை 85 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து 146 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவைகள் மட்டுமே தங்கள் வசம் உள்ளதாகவும், மற்றபடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என்றும் மீண்டும் பொய் சொல்லி மறுத்துள்ளது இலங்கை கடற்படை.