இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் 5,000 பேர் கொண்ட பாதுகாப்பு பிரிவு கூண்டோடு கலைப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் 5,000 பேர் கொண்ட பாதுகாப்புப் பிரிவு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தற்போது மைத்ரிபாலவுக்கு புதிய சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்குகிறது.
இலங்கையில் வரும் 17-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் களத்தில் உள்ளார்.
தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலி போராளிகளின் கட்சி, தமிழ்த் தேசிய முன்னணி என பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் பாதுகாப்பு படை தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலமாக அப்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு அளித்த படையினரே மைத்ரிபாலவுக்கும் பாதுகாப்பு வழங்கினர். ஆனால் இந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு வீரர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 5,000 பேர் கொண்ட இந்த பாதுகாப்புப் படை கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக சிறப்பு கமாண்டோ படை மைத்ரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளது.