பிரபாகரனுக்கு உண்மையில் என்னதான் நடந்தது? கண்டுபிடிக்க சொல்லும் இலங்கை அமைச்சர்கள்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உண்மையில் என்னதான் நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, மனோ கணேசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா, 2009ஆம் ஆண்டு மே 19-ந் தேதியன்று யுத்தம் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்த போது பிரபாகரன் உயிருடன் இருந்தார்; ஆனால் அன்றே பிரபாகரன் உடலை கண்டெடுத்ததாக எனக்கு தகவலும் தந்தனர் எனக் கூறியிருந்தார்.
இதனால் இலங்கை அரசு காட்டிய உடல் பிரபாகரனுடையதுதானா? பிரபாகரனுக்கு என்ன நடந்தது? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் சரத் பொன்சேகாவின் கருத்தின் அடிப்படையில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது? என்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் மற்றொரு அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனும், பொன்சேகாவின் கருத்து முக்கியமான வாக்குமூலமாகும். அவர்தான் யுத்தத்துக்கு தலைமை வகித்தவர். அவரையும் மீறி நடந்த மனித உரிமை மீறல்கள் நிச்சயம் அம்பலமாகும் என்றார்.