ரூ.1.18 கோடி வங்கிப் பணம் கொள்ளை… தலைமறைவான இசக்கிபாண்டியன் கோர்ட்டில் சரண்
தூத்துக்குடி: ரூ. 1.18 கோடி வங்கிப் பணத்தை கொள்ளையடித்து தலைமறைவான இசக்கி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இன்று சரணடைந்தார்.
சென்னை மதுரவாயல் சுடலைமாடன் கோயில் தெருவில் லாஜி கேஷ் எனும் பெயரில் வங்கி ஏடிஎம்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் இசக்கி பாண்டியன். சாத்தான்குளம் தாலுகா அரசனூர் அருகில் உள்ள தொடுக்குளம் பகுதியை சேர்ந்தவரான இவர் கார்களில் பணத்தை கொண்டு சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் இந்த நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில், அக். 3ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான காரில் சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் நிரப்புவதற்காக ரூ.2 கோடியே 30 லட்சத்தை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்றனர். காரை இசக்கிபாண்டி ஓட்டிச் சென்றார். பல்வேறு ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்தனர்.
அப்போது, இசக்கியுடன் சென்ற நான்கு பேரில் இருவர் ஏடிஎம் மையத்தின் உள்ளே பணத்தை நிரப்ப சென்றனர். மற்றொருவர் டீ குடிக்க சென்றுவிட்டார். நேரம் பார்த்து காத்திருந்த இசக்கி பாண்டியன் திடீரென காரை எடுத்துக் கொண்டு ஒரு கோடியே 18 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்கவும் இசக்கி பாண்டியனை பிடிக்கவும் 5 தனிப்படை அமைக்கப்பட்டன. இசக்கியின் உறவினர் இருக்கும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சென்று தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இசக்கி பாண்டியன் இன்று சரணடைந்துள்ளார்.