சென்னை: 'காத்தாட' உறங்கியவர்களை காவு வாங்கிய மணல் 'லாரி'
சென்னை: காற்றுக்காக சென்னையில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி ஏறியதில் ஒரு பெண் உயிரிழந்தார். விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ‘எ' பிளாக்கின் முன்பு காற்றுக்காக சிலர் பிளாட்பாரத்தில் நேற்றிரவு தூங்கினர். அதிகாலை 4 மணியளவில் வியாசர்பாடி வழியாக தண்டையார்பேட்டைக்கு சென்ற மணல் லாரி ஒன்று ஓட்டுநர் ரத்தின குமாரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்படியே அந்த லாரி பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஏறி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அஞ்சலை (45) என்ற பெண் தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார். குப்பன் (55), வடிவேல் (24) ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து எம்.கே.பி. நகர் காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த குப்பன், வடிவேல் ஆகியோரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டிரைவர் ரத்தினகுமார் ஸ்டீயரிங் நெஞ்சில் குத்திய நிலையில் டிரைவர் சீட்டில் படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மரத்தில் மோதி நின்றதால் மரத்துக்கு மறுபுறம் படுத்து தூங்கிய அஞ்சலையின் தம்பி பிலிப், அவரது மனைவி எம்வள்ளி, மகள் சந்தியா, பேத்தி வினோதினி ஆகியோர் காயம் எதுவும் இல்லாமல் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications