கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் டிமிக்கி... தந்தைக்கு பதில் மகனை கடத்திய மர்ம கும்பல்
நெல்லை: கொடுத்தக் கடனை திருப்பித் தராமல் டிமிக்கி கொடுத்து வந்த தகப்பனை பிடிப்பற்கு பதிலாக அவரது மகனை கடன் கொடுத்த கும்பல் ஒன்று கடத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை அடுத்த சிவந்திபுரம் எம்ஜிஆர் தங்கநகரை சேர்ந்தவர் பிரமு அம்மாள். இவர் சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்து. மினி வேன் டிரைவரான இவர், மனைவி செல்வி, மகன்கள் பிரேம்குமார், மாரிக்கண் ஆகியோருடன் வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது இன்னொரு மகன் பிரவீன் குமார் மட்டும் சிவந்திபுரத்தில் உள்ள பாட்டி பிரமு அம்மாள் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
முத்து சிவந்திபுரத்தில் வசித்த காலத்தில் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், பணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் வண்ணாரப்பேட்டைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாட்டியின் வீட்டில் தங்கி இருந்த பிரவீன்குமார், தேர்வு எழுதிவிட்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஆட்டோவில் வந்த வைராவிகுளத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று வழி மறித்து, உனது தந்தை எங்களிடம் கடனாக வாங்கிய ரூ.10 ஆயிரத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறி மாணவர் பிரவீன்குமாரை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
பிரவீன் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால், அதிர்ச்சி அடைந்த பாட்டி பிரமு அம்மாள் போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனிடையே மாணவரை கடத்திச் சென்ற கும்பல் அவரை பாதியிலேயே இறக்கி விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள வி.கே.புரம் போலீசார் மாணவரை கடத்திய மர்மக் கும்பலை தேடி வருகின்றனர்.