மூடப்படும் 1500 டாஸ்மாக் கடைகள்... ஹைகோர்ட் உத்தரவால் அதிரடி சர்வே ஆரம்பம்!
நெல்லை: மதுவினால் நாளுக்கு நாளுக்கு பிரச்சனை அதிகரித்து வருவதால், 1500 மதுக்கடைகளை மூட ஹைகோர்ட் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் சுமார் 6800 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2500 கோடி வரை வருமானம் கூடுதலாக கிடைத்து வந்தது.
மேலும் கடைகளுக்கு மதுவிற்பனை அளவு நிர்ணயிக்கப்பட்டதால் 2015-16ம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
போராட்டம்...
இந்த வருவாய் மூலமே அதிமுக அரசு இலவச .திட்டங்களையும், நலத்தி்ட்டங்களையும் நடத்தும் நிலை இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடைக்க கோரி எதிர்கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன.
படிப்படியாக மதுவிலக்கு...
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதலில் 500 மதுக்கடைகளை அடைக்க முதல்வர் உத்தரவிட்டார்.
வழக்கு...
இருப்பினும் கோயில், பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இதுகுறித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சர்வே...
இதில் மாநிலம் முழுவதும் கோயில், பள்ளி, கல்லூரி, குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளை மூடுவது குறித்து சர்வே செய்ய கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சர்வே பணியை அதிரடியாக துவங்கி உள்ளனர். இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 1500 மதுக்கடைகள் மூடப்பட்டும் என்று தெரிகிறது.