தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: எம்.எல்.ஏவாக பதவியேற்க கருணாநிதி வருவாரா?
சென்னை: 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தின்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து கடந்த 23ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் 28 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை நியமிக்கப்பட்டு அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் திமுக வலுவான எதிர்க்கட்சியாகியுள்ளது. நேற்று நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சட்டசபையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ், தனியரசு போன்றவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் அவர்கள் அதிமுக உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள்.
15வது சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பார்கள். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணிநேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்து பதவியேற்பாரா என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்படும்.
வரும் ஜுன் மாதம் 3ம் தேதி சட்டசபை மீண்டும் கூடும். அப்போது முறையாக சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications