விபரீதத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் #Accident
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் நடைபெற்றன.
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சக்கரம் , 4 சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் சென்னையில் இளைஞர்கள் கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
என்னதான் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கட்டுப்பாடுகளை விதித்தாலும் இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று புத்தாண்டு கொண்டாடுவதை விட்டபாடில்லை.
இனிப்பு வழங்கி...
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்கள் கூடினர். இதையடுத்து புத்தாண்டு பிறந்ததை அடுத்து வாணவேடிக்கையுடன் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஒரே நாள் இரவில்...
இந்நிலையில் கொண்டாட்டத்துக்கு பிறகு, இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சீறி பாய்ந்தனர். இதில் 170 விபத்துகள் ஒரே நாள் இரவில் நடைபெற்றன. விபத்தில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சர் ஆறுதல்
மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உயிரிழப்பு நேராத வண்ணம்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிரிழப்பு நேராத வண்ணம் சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29), புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.