சிங்கள கடற்படையின் தொடரும் அட்டூழியம்! 19 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!
ராமேஸ்வரம்: இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நேற்று இரவு சிறை பிடித்து சென்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏற்கெனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம், புதுவை மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து தாக்கி சிறைபிடித்து சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.