அதிகாரிகள் அலட்சியம்... பேசின்பாலத்தில் பணியில் இருந்த தொழிலாளி கூவத்தில் விழுந்து பலி!
சென்னையில் பேசின்பாலத்தில் பணி செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : பேசின் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞர் கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் மழையால் சேதமடைந்த பேசின் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் 19 வயது இளைஞ்ர் கமலேஷூம் ஈடுபட்டுள்ளார். அப்போது பிற்பகல் 3 மணியளவில் கமலேஷ் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கமலேஷ் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
ஆனால் இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கமலேஷின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பணிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என்று மாலையில் வந்து கேட்ட போது தான் சக ஊழியர்கள் இந்தத் தகவலைக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கமலேஷின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் கமலேஷின் சட்டை மற்றும் காலணி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூவம் ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் அவனை மீட்டிருக்கலாம் என்று அவனது குடும்பத்தார் கண்ணீர் வடிக்கின்றனர். இதனிடையே இறந்த கமலேஷின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.