கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி.. பொதுமக்கள் பீதி
கோவையில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் பிரமோத். இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வந்தார். அங்கு அவருக்கு டெங்கு கண்டறியப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே போன்று ஓசூரைச் சேர்ந்த தேன்மொழி என்ற இளம்பெண்ணுக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதனால் அவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.