முழு அடைப்பு முழு வெற்றி.... வெறிச்சோடிய விழுப்புரம்
விழுப்புரம்: காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் லாரிகள், தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதனை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியும் தமிழக விவசாய சங்கங்கள், வியாபாரிகள் சங்கள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்பிற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், அரசுப் பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றன.