பாஜகவின் 3 நியமன எம்எல்ஏக்கள் திடீர் பதவியேற்பு.. புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். சபாநாயகருக்கு பதில் ஆளுநரே பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளது வரம்பை மீறிய செயல் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை. இந்த பதவிக்கு ஆளுநர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார்.
அப்பட்டியலில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பாஜக பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தன. புதுச்சேரியில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கின்ற நிலையில், பாஜகவை சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் மேற்கண்ட மூவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நியமன எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் மரபு. ஆளுநர் கிரண்பேடி மரபை மீறி பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பதவியேற்பு நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னதாக நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் கிரண்பேடி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.