வேலை வாங்கி தருவதாக மோசடி : வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் வக்கீல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர், வக்கீல் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள வடமலைசத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பரமசிவன். ஐடிஐ மெக்கானிக் படித்துள்ளார். சுப்பிரமணியன் விவசாய கடன் சம்பந்தமாக அங்குள்ள தேசியமாக்கப்பட்ட வங்கி்க்கு சென்று வரும் போது மேலாளர் விபூல் ஆனந்துடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது தனது மகனுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு மேலாளர் ஆனந்த் தனக்கு தெரிந்த வக்கீல் வேல் மகாராஜன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவருககு தலைமை செயலகத்தில் பழக்கம் இருப்பதால் அதன் மூலம் பரமசிவனுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் ஆனந்துடன் சென்று வக்கீலை சந்தித்தார். அவரது வீட்டில் வைத்து ரூ.4 லட்சம் கொடுத்தார். அப்போது வீ்ட்டில் வேல் மகாராஜ் மனைவி மற்றும் மகன் இருந்துள்ளனர். தொடர்ந்து சுப்பிரமணியன் வக்கீல் வேல் மகராஜின் வங்கி கணக்குக்கு ரூ.3 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.
இந்நிலையில் விபூல் ஆனந்த சென்னை மாதவரம் கிளைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே வேல் மகராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தனது மகனுக்கு வேலை வாங்கி தராததால் சுப்பிரமணியன் வக்கீல் மகனிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் வக்கீல் மகன் தர மறுத்து விட்டார்.
இதையடுத்து சுப்பிரமணியன் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி பண மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் விபூல் ஆனந்த், வக்கீல் சக்தி சுப்பிரமணியன் என்ற சதீஷ், அவரது தாயார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.