கரூர்: திமுக பிரமுகர் கொலை வழக்கில் டாக்டர் மகன் சரண்!
கரூர்: கரூரில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி கோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல டாக்டர் மகன் குருபிரசாத் என்பவர் சிவகங்கை நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.
கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த உதய சூரியன் என்பவரது மகன் கோபி (30). இவர் கரூர் நகர தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
இந்த நிலையில், இவருடைய உறவினர் மகன் பிரவீண் என்பவருக்கும், நீலிமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அவர்களை சமாதானம் செய்ய தி.மு.க. நிர்வாகி கோபி முயன்றுள்ள்ளார். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் முதல் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு , கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள மக்கள் பாதை என்ற பகுதிக்கு சென்றார்.
அப்போது, அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திமுக நிர்வாகி கோபியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு தெடார்பாக, கரூரில் வசித்து வரும் டாக்டர் பொன்னையா என்பவரின் மகன் குருபிரசாத் (41), மற்றும் சந்தோஷ் குமார், ஆட்டோ டிரைவர் காளிமுத்து, ராஜா உள்பட சிலர் மீது, கரூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டாக்டர் பொன்னையா அதிமுகவைச் சேர்ந்தவர்.
இதனையடுத்து, சந்தோஷ்குமார், ராஜா ஆகியோர் கடந்த டிசம்பர் 2 ம் தேதி மானாமதுரை நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குருபிரசாத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், சிவகங்கை ஜே.எம். 1 நீதி மன்றத்தில், குருபிரசாத் சரண் அடைந்தார்.