நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்... 32 புதிய நேர்முக உதவியாளர்களை நியமித்தது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக 32 மாவட்டங்களுக்கு உதவி இயக்குனர் அந்தஸ்தில் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 385 ஊராட்சி ஓன்றியங்கள், 12 ஆயிரத்து 527 கிராம ஊராட்சிகள் உள்ளன. தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் 23ம் தேதி முடிகிறது.
இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு ரூ.183 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக புதிய பணியிடங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 32 நேர்முக உதவியாளர்கள், பிடிஓக்கள், உதவியாளர்கள், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் கமயூட்டரில் பதவி செய்ய 31 மாவட்டங்களுக்கும் 31 கணிணி உதவியாளர்கள், 385 ஊராட்சி ஓன்றியங்களுக்கும் 385 கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட 903 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக உதவி இயக்குனர் அந்தஸ்தில் 32 மாவட்டங்களுக்கு தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்ட தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளராக விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவி திட்ட அலுவலராக பணியாற்றும் லக்குவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நேர்முக உதவியாளராக விருதுநகர் மாவட்ட உதவி இயக்குனர் ஜார்ஜ் அண்டோனி மைக்கேல் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் முகமது உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.