5000 வேட்பாளர்களைக் கண்ட 96 சட்டசபைத் தேர்தலும்.. 3794 பேர் களம் காணும் 2016 தேர்தலும்!
சென்னை: 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்தான் தமிழகத்தில் அதிக அளவிலான வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். அதற்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவிலான வேட்பாளர்களை தமிழகம் கண்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நிறைவடைந்து, அது பரிசீலனை முடிந்து நேற்றுடன் மனுக்களை வாபஸ் பெறும் அவகாசமும் முடிவடைந்தது.
இறுதிக் கட்டமாக தற்போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 3794 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். கடந்த 1996ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவிலான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
திரும்பிப் பார்க்க வைத்த மொடக்குறிச்சி
1996ம் ஆண்டு தேர்தலைப் பற்றிப் பேசும்போது மொடக்குறிச்சிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். புதிய வரலாறு படைத்த தேர்தல் அது. நாடே மொடக்குறிச்சியைத் திரும்பிப் பார்த்து அயர்ந்தது.
1033 பேர் போட்டி
1996 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டு நாட்டையே அதிர வைத்தனர். இதன் காரணமாக அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 5000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காணும் நிலை ஏற்பட்டது.
உயரும் எண்ணிக்கை
ஆனால் 2001 தேர்தலில் இது அடியோடு குறைந்து மொத்தமே 1860 வேட்பாளர்கள்தான் தமிழகத்தில் போட்டியிட்டனர். ஆனால் அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
2011ல் 2748
2006 தேர்தலில் 2586 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2011 தேர்தலில் இது 2748 ஆக இருந்தது. இதுவே 1991ல் நடந்த தேர்தலின்போது 2834 வேட்பாளர்களாக இருந்தது.
லீடிங்கில் ஜெயலலிதா
தற்போதைய தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 3794 வேட்பாளர்களாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில்தான் அதிக அளவாக 45 பேர் போட்டியிடுகின்றனர்.
3 தொகுதிகளில் குறைந்த வேட்பாளர்கள்
தமிழகத்திலேயே குறைந்த அளவிலான வேட்பாளர்களாக ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறை தொகுதிகளில் தலா 8 பேர் களத்தில் நிற்கின்றனர்.
ஆர்.கே.நகரும், அரவக்குறிச்சியும்
அதிக வேட்பாளர்களைக் கொண்டுள்ள தொகுதிகளாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் (45), தொழிலதிபர் கே.சி.பழனிச்சாமி போட்டியிடும் அரவக்குறிச்சி (36) ஆகியவை உள்ளன.
48 தொகுதிகளில் 20 பேருக்கும் மேல்
தமிழகத்தில் 48 தொகுதிகளில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 9 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
விஜயகாந்த் தொகுதியில் 12 பேர் விலகல்
விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில்தான் அதிக அளவிலான வேட்பாளர்கள் நேற்று மனுக்களை வாபஸ் பெற்றனர். அதாவது 12 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
24 தொகுதிகளில் 20க்கும் மேல் நீக்கம்
தமிழகத்திலேயே அதிக அளவாக, 24 தொகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைவர்களின் தொகுதிகளில்
தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆர்.கே.நகருக்கு அடுத்து விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை, மாஜி டிஜிபிநடராஜ் போட்டியிடும் மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் தலா 25 பேர் போட்டியில் உள்ளனர். ஸ்டாலின் தொகுதியில் 24 பேர் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடியில் 23 பேர் களத்தில் உள்ளனர்.
சரத்குமார் - சீமான்
சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூரில் 13 பேர் போட்டியில் உள்ளனர். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் 10 பேர் உள்ளனர். துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் 15 பேரும், சீமான் போட்டியிடும் கடலூரில் 14 பேரும், அன்புமணி போட்டியிடும் பென்னாகரத்தில் 18 பேரும் போட்டியில் உள்ளனர்.