மோசடி செய்யப்பட்ட 2 கோடி ஏ.டி.எம் பணம்-நான்கு பேர் கைது
திருப்பூர்: ஏ.டி.எம்.மெஷினில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்ற பணத்தில் ரூ.2 கோடியை சுருட்டிக் கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியை தலைமையிடமாகக்கொண்டு "செக்யூரிட்டி ரெயின்ஸ் இந்தியா பிரைவேட் லிட் " என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. தனியார் வங்கியின் ஏ.டி.எம் களில் பணம் நிரப்பும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கோவை மண்டல அலுவலகத்தின் கீழ் திருப்பூர், ஓடக்காடு பகுதியில் இதன் கிளை உள்ளது.
மேலாளராக, கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும், ஊழியர்களாக, அங்கேரிபாளையம் விஷ்ணு வியாஸ், அவிநாசியை சேர்ந்த பரமசிவம், பிச்சம்பாளையத்தை நேர்த் பிரபு, ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
திருப்பூரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, எச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்பும் பணியை இவர்கள் செய்து வந்தனர். 2011 முதல் 2014 வரை ஏ.டி.எம்களில் வைக்க கொண்டு சென்ற பணத்தில் இவர்கள் ஏராளமாக மோசடி செய்துள்ளனர்.
குறைந்த அளவு பணத்தை வைத்துவிட்டு அலுவலகத்தில் அதிகளவு பணம் வைத்ததாக கணக்கு காட்டியுள்ளனர். இப்படியே இதுவரை மொத்தம் 2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
டில்லி தலைமையலுவலகத்தில் நடந்த தணிக்கையில் இவ்விவரங்கள் தெரியவந்தன. இதையடுத்து கோவை மண்டல அலுவலக மேலாளர் பரதன் இவர்களின் மீது திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சேகர், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபின் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.