ஈரானில் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களும் விடுதலை
நாகர்கோவில்: ஈரானில் அந்த நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஹிலாரியன் (51), டேவிட் (40), பிரபு (33), அந்தோணிராஜ் (41). 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மன் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
கவலையடைந்த அவருடைய உறவினர்கள், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணியிடம் இது பற்றி தெரிவித்தனர். அவர்களை ஈரான் கடற்படையினர் கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஜஸ்டின் ஆண்டனி இதுதொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரி யோகேஷ்வர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், செயலாளர் விஜயகுமார், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி அவர்களை கண்டுபிடிக்கக் கோரினார்.
இந்தலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி ஜஸ்டின் ஆன்டணிக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் இருந்து கடிதம் வந்தது. அதில், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 4 பேரும் கடல் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக பிப்ரவரி 7ம் தேதி ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜஸ்டின் ஆன்டணி மேற்கொண்டார். அவருடைய தொடர் முயற்சியால் 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஈரானில் உள்ள இந்தியா தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும், அங்கிருந்து இந்தியா திரும்பினர். அவர்கள் ஈரான் நாட்டில் இருந்து துபாய் வழியாக விமானத்தில் நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர்.
விமான நிலையத்தில் மீனவர் ஹிலாரியன் கூறுகையில், துபாயில் நாங்கள் கடலில் மீன் பிடித்தபோது எங்களை ஈரான் நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் நாங்கள் சாப்பிட உணவு இன்றி தவித்தோம். எங்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்தனர் என்றார்.
கடற்படையினர் கைது செய்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்தோணி ராஜ் காயமடைந்துள்ளார். அவரை ஈரான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் இன்னும் சரியாக குணமாகவில்லையாம்.